பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது.. பின்னணி என்ன..?
கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது.
கொரோனா குறித்த பயம் இந்தியாவில் பரவி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இரண்டாவது மரணம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 83 ஐ எட்டியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கேரள மாநிலத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளி மாநில சுற்றுலா பயணிகளால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் அந்த பகுதியினரிடையே ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பீதி ஓயும் வரை பத்மநாபபுரம் அரண்மனையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனை நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டது.