ரயிலில் கூடுதல் லக்கேஜுக்கு 6 மடங்கு அபராதம் விதிப்பதாக அறிவித்திருந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது ரயில்வே நிர்வாகம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூன் 6-ஆம் தேதி ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் லக்கேஜ்களை எடுத்துவந்தால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்திருந்தது. இது, ஏற்கெனவே இருக்கும் விதிமுறைதான் என்றும், இனி இது முறையாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும், இதற்கான உத்தரவு அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த விதிமுறைக்கு ரயில் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


இதையடுத்து, நேற்று இந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாஜ்பாய். 


அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது...! 


 “கோடைக் காலத்தில் ரயிலில் பயணம்செய்யும் பயணிகள், அதிகப்படியான லக்கேஜ் எடுத்துச்செல்வதால், மற்ற பயணிகளுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுவதாகத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து, அதிக லக்கேஜ் எடுத்துச் செல்வதால் மற்றவர்களுக்கு ஏற்படும் சிரமம் தொடர்பாக விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே இது போன்ற ஒரு திட்டத்தை அறிவித்தோம். இது, விழிப்புஉணர்வு ஏற்படுத்த மட்டும்தான். இதன்மூலம்,  மக்களுக்கு தங்களின் பயணத்தின்போது அனுமதிக்கப்பட்ட அளவுகுறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். 


அதன்படி, ஏ.சி முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவர் 70 கிலோ வரை இலவசமாகவும் கட்டணம் செலுத்திக் கூடுதலாக 80 கிலோவும் எடுத்துவரலாம். ஏ.சி இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவர் கட்டணமின்றி 50 கிலோவும் கட்டணத்துடன் கூடுதலாக 50 கிலோவும் எடுத்து வரலாம். இரண்டாம் வகுப்பு படுக்கையில் பயணிப்பவர், கட்டணமின்றி 40 கிலோவும் கட்டணத்துடன் கூடுதலாக 40 கிலோவும் எடுத்து வரலாம். இதேபோல, இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணிப்பவர், கட்டணமின்றி 35 கிலோவும் கட்டணத்துடன் கூடுதலாக 35 கிலோவும் எடுத்து வரலாம் என தெரிவித்துள்ளது குறிப்படத்தக்கது!!