நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது செல்பி எடுத்த புகைப்படத்தை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வைத்து உள்ளனர்.


இதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் அன்புசெழியன் ரூ.165 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 


இதனிடையே படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரசிகர்களுடன் செல்பியே எடுத்துக்கொண்டார். படப்பிடிப்பு வேன் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கி முதலில் கையசைத்தார். அதனையடுத்து தன்னுடைய செல்போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார்.


இந்நிலையில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் 'நன்றி நெய்வேலி' என செல்பி புகைப்படத்தை விஜய் பகிர்ந்துள்ளார்.