வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமலேயே Driving Licence வாங்கலாம்..!

Mon, 08 Feb 2021-9:33 am,

குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களைப் பெற முடியும் என இதில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை, இன்னும் வரைவு நிலையில்தான் உள்ளது. இது ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதை எளிதாக்குவதோடு, சிறப்பான பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

"மேலும், அத்தகைய மையங்களில் இருந்து ஓட்டுநர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த எந்தவொரு நபரும், ஓட்டுநர் உரிமத்திற்கு (Driving License) விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது" என்று அதிகாரப்பூர்வ அமைச்சக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைப் பாதுகாப்பில் (Road Safety) அலட்சியம் காரணமாக ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சாலை போக்குவரத்து அமைச்சகம் 2021 ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு மாதத்தை கொண்டாடுகிறது.

இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தின் கருப்பொருள், 'சடக் சுரக்ஷா-ஜீவன் ரக்ஷா' அதாவது, ‘சாலை பாதுகாப்பு-வாழ்க்கை பாதுகாப்பு’ என்பதாகும். 

"இந்த நடவடிக்கை போக்குவரத்துத் துறையில் விசேஷமாக பயிற்சி பெற்ற ஓட்டுனர்கள் அதிகரிப்பதை உறுதி செய்யும். இது அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு சாலை விபத்துகளையும் குறைக்கும்" என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 29 தேதியிட்ட வரைவு அறிவிப்பு பொது ஆலோசனைக்காக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த கட்டத்திற்குப் பிறகு முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சகம் கூறியது.

மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசிக்கிறது.

மேலும், இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனையில் (Driving test) கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் சாலை விபத்துக்களை பாதியாக குறைக்க அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), விபத்துக்களைக் குறைப்பது படிப்படியான செயல் அல்ல என்றும், இதனுடன் தொடர்புடைய அனைவரும் இதற்கு உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

சாலை போக்குவரத்து அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), பொதுப்பணித் துறை (PWD) ஆகியவற்றின் பொறியாளர்கள் மற்றும் சாலை கட்டுமானம் மற்றும் நிர்வாகத்துடன் தொடர்புடைய பல ஏஜென்சிகளுக்கு மூன்று நாள் கட்டாய பயிற்சி அளிக்க அமைச்சர் பரிந்துரைத்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link