கள்ளழகருடன் மதுரைக்கு சென்ற தற்காலிக உண்டியல்... வசூல் என்ன தெரியுமா?
)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் அருள்மிகு ஸ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப். 21ஆம் தேதி அழகர் மலையை விட்டு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.
)
தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வில் கலந்துகொண்டு மீண்டும் அழகர்மலைக்கு ஏப். 27ஆம் தேதி வந்தடைந்தார். இந்த நிலையில், கள்ளழகருடன் பாரம்பரிய முறைப்படி, மாட்டுவண்டி மற்றும் தள்ளு வண்டியில் என 39 தற்காலிக காணிக்கை உண்டியல்கள் வலம் வந்தன.
)
இதில், பக்தர்கள் பலரும் தங்களுடைய காணிக்கைகளை செலுத்திய நிலையில், இன்று ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், 39 தற்காலிக தள்ளு உண்டியல்கள், திருக்கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தலைமையில் திறக்கப்பட்டு எண்ணும் பணியானது இன்று தொடங்கியது.
இதில், திருக்கோயில் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று கலந்துக் கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பக்தர்களிடம் உண்டியல் காணிக்கையாக 98 லட்சத்து 62 ஆயிரத்து 978 ரூபாயும், 9 கிராம் தங்கமும், 175 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.
இதில், மதுரை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி, மேலூர் சரக ஆய்வர் ஐயம்பெருமாள் மற்றும் திருக்கோயில் அறங்காவலர்கள் கலந்துக் கொண்டனர்.
பக்தர்களிடமிருந்து உண்டியல் மூலமாக கிடைக்கப்பெற்ற காணிக்கை தொகைகள் சரிபார்க்கப்பட்டு திருக்கோயில் நிர்வாக பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டது.