Old Pension Scheme முக்கிய அப்டேட்: OPS vs NPS... பழைய முறைக்கு மாற அவகாசம் நீட்டிக்கப்படுமா?

Fri, 09 Aug 2024-11:29 am,

மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அரசு அமல்பட்டுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ஓபிஎஸ் தொடர்பான ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை. இதற்கிடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மத்திய அரசிடமிருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம்.

தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து  இருந்து பழைய ஓய்வூதியத்துக்கு மாறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓபிஎஸ்) மாறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

தேசிய ஓய்வூதிய அமைப்பு மத்திய அரசு ஊழியர்களுக்காக 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஜனவரி 1, 2004 முதல், மத்திய அரசுப் பணிகளில் (ஆயுதப் படைகள் தவிர) அனைத்துப் புதிய பணியாளர்களுக்கும் என்பிஎஸ் (NPS) கட்டாயம் என்று கூறியிருந்தார்.

முன்னதாக, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை 2023 மார்ச் 3 அன்று அரசாணையைப் பிறப்பித்ததாக இணை அமைச்சர் கூறினார். இந்த உத்தரவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுப் பணியாளர்கள் (ஓய்வூதியம்) விதிகள், 1972 (இப்போது 2021) கீழ் சேர ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், டிசம்பர் 22, 2003 அன்று என்பிஎஸ் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான வசதி வழங்கப்பட்டது.

 

தற்போதைய செயல்முறையின்படி, அத்தகைய விருப்பம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சகத்தில், அந்த பதவியின் நியமன அதிகாரி இந்த அறிவுறுத்தல்களை செயல்படுத்துவதை சரிபார்த்து இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று இணை அமைச்சர் சிங் கூறினார். அவர் கூறுகையில், 'ஒவ்வொரு நடவடிக்கைக்கும், பணியாளர் தேர்வு செய்யும் விருப்பத்தை ஆய்வு செய்து முடிவெடுக்க, குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்று அவர் மேலும் தெரிவித்தார். பணியாளர்கள் தங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 31, 2023 வரை அவகாசம் இருந்தது. இதற்குப் பிறகு, விருப்பத்தை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட நியமன அதிகாரி முடிவெடுப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2023 ஆக இருந்தது. மார்ச் 3, 2023 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக எந்த அறிவுறுத்தலும் வழங்க முன்மொழிவு இல்லை என்று அமைச்சர் கூறினார்.

அகில இந்திய என்பிஎஸ் (NPS) ஊழியர் சம்மேளனத்தின் தேசிய தலைவர் மஞ்சித் சிங் படேல், தகுதியுள்ள ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கான தேதியை நீட்டிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். படேல், 'பல என்பிஎஸ் ஊழியர்களுக்கு இன்னும் இந்த சலுகை கிடைக்கவில்லை. இவர்கள் இதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோருகின்றனர். மீதமுள்ள தகுதியுள்ள ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கான தேதியை நீட்டிக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.' என்று கொரியுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தின் (OPS) கீழ் ஒரு உத்தரவாதமான ஓய்வூதிய அமைப்பு இருந்தது. ஆனால் தேசிய ஓய்வூதிய அமைப்பில் அடிப்படை ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பிடித்தம் செய்து, ஓய்வுபெறும் போது நிறுவனத்தின் பங்களிப்போடு சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த முறை தங்களுக்கு ஏற்றதல்ல என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வாதாடுகிறார்கள். 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு தொடர்புடைய அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கபடுகின்றது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link