அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசுப்பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.  


இதற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவின் சார்பில் கடந்த மாதம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 


அப்போது, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றும்  தேவைப்பட்டால், அவசர சட்டமும் கொண்டு வரப்படும் எனவும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்திற்குட்பட்டு இட ஒதுக்கீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.