மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என ப.சிதம்பரம் ட்வீட்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்துள்ளார். தனிநபர் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பாக, மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய ராம்தாஸ் அதவாலே, இது தொடர்பாக கடந்த 1993-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியதில் இருந்து தற்போது வரை 620 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். 


உயிரிழப்புகள் பற்றி 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தகவல்களை அளித்து வருதாகவும், இதில் 144 உயிரிழப்புகளுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 88 உயிரிழப்புகள் நேர்ந்ததாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த 6 ஆண்டுகளில் 53,598 தொழிலாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இந்நிலையில், இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் " தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல்  உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. உயிரிழந்த 144 மனிதர்கள் எந்த சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன். 


மனித கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது. மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்..