ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்தற்கான காரணத்தை கோமாளி பட இயக்குநர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் கோமாளி. இது அவரது 24-வது படமாகும். இந்த திரைப்படத்தில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார் . மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.


இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.


இந்த ட்ரைலரில், அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார்.



ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.



இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரண்ட் ஆனது. இந்நிலையில் இந்தக் காட்சி வைக்கப்பட்டதற்கான காரணத்தை கோமாளி படவிழாவில் பேசிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், “90’ஸ் கிட்ஸ் இந்தப் படத்தை மிகவும் ரசித்து பார்ப்பார்கள். பார்வையாளர்களுக்கு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும். நான் பயங்கர ரஜினி ரசிகன். லிங்கா படம் வெளியான போது பாலாபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறேன். அவர் சீக்கிரம் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் காட்சியை படத்தில் வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.