கடந்த 2006-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடிவேலு, மனோரமா, நாசர், தேஜ ஶ்ரீ, மோனிக்கா, இளவரசு, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி இசையமைத்திருந்தனர். தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் நடிகா் வடிவேலு நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 


ஆனால் தற்போது வடிவேலு அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தயாரிப்பாளா் சங்கத்தில் படக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.


இந்த கடிதத்திற்கு விளக்கம் அளித்த வடிவேலு, இப்படத்தில் நடிக்க ஜூன் 2016 ல் ஒப்புக்கொண்டேன். 2016 டிசம்பருக்குள் படத்தை முடித்து விடுவதாகவும் அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என உறுதி அளித்ததால் வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.


டிசம்பர் 2016 வரை படப்பிடிப்பை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர். இருப்பினும் கலைத்துறை மற்றும் நடிகா் சங்கத்தின் நலன் கருதி ஒப்பந்த காலத்திற்கு பின்னரும் அந்த படத்தில் நடித்து வந்தேன். 


எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். 


இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு என்னை நேரில் அழைத்து கருத்து கேட்காததது விதிகளுக்கு முரணானது. இந்த படத்தில் தொடர்ந்து நடித்தால் நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.


இந்த படத்தால் எனக்கு பொருள் செலவும் மனவேதனையும் அதிகரித்துள்ளது. எனவே இந்த படத்தில் நடிக்க நாட்கள் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்