2019 ஐ.பி.எல் தொடர் எங்கு? எப்பொழுது தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு
இந்த வருட ஐபில் சீசன் 12 தொடருக்கான போட்டி எப்பொழுது, எங்கு நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 2019 வருடம் ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் நடக்க உள்ளது. எப்பொழுதும் ஐபிஎல் தொடர் "மே" மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் வரும் மே மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் "ஐபிஎல் 12" சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடர் எங்கு, எப்பொழுது தொடங்கும் என்ற அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது இந்த வருட ஐபில் போட்டி (சீசன் 12) இந்தியாவில் தான் நடைபெறும் எனவும், தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் வர இருப்பதால், அதற்க்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர், ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் எனவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 12 வது சீசனுக்கான போட்டி ஆரம்ப தேதி அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.