Tamil Nadu vs Mumbai: ரஞ்சி டிராபி தொடர் (Ranji Trophy 2024) தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய அரையிறுதி சுற்றில், விதர்பா - மத்திய பிரதேசம், மும்பை - தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. இதில் மூன்றாம் நாளான இன்று விதர்பா - மத்திய பிரதேசம் போட்டி விறுவிறுப்பான நிலையில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாம் நாள் முடிவில் விதர்பா பேட்டிங் செய்து வரும் நிலையில் தற்போது 261 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருக்கிறது. இன்னும் 4 விக்கெட்டுகள் கையில் இருக்க மொத்தம் 2 நாள்கள் கையில் இருப்பதால், விதர்பாவின் வெற்றிக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது எனலாம். விதர்பா அணியில் கருண் நாயர், யாஷ் தாக்கூர், உமேஷ் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர். 


மறுபுறம், மும்பை - தமிழ்நாடு போட்டி மூன்றாம் நாளான இன்றே முடிவுக்கு வந்துவிட்டது. மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ரஞ்சி டிராபி தொடரில் 47ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கும் மும்பை அணி, 41 முறை சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தோனியின் திடீர் அறிவிப்பு... கேப்டன்ஸியில் இருந்து விலகலா? - என்ன விஷயம்?


தமிழ்நாடு அணியின் தோல்வி குறித்து அதன் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி ஊடகத்திடம் பேசுகையில்,"நான் பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டேன், இது மும்பை காலிறுதி போட்டியில் விளையாடிய ஆடுகளத்தை விட வித்தியாசமானது என்று. மேலும், இது எதற்கு சாதகமாக இருக்கும் என்பதும் தெரிந்துவிட்டது. அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது, இது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்று, மேலும் ஆட்டம் கடுமையாக இருக்கும் என்றும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆட்டத்தில் வெல்ல முடியும் என்பதும் அப்போதே தெரிந்தது. 


நான் வெளிப்படையாக பேசுபவன், நாங்கள் முதல் நாள் ஆட்டத்தின் காலை 9 மணிக்கே தோல்வியடைந்துவிட்டோம்.  டாஸை வென்றோம் எல்லாம் சரியாகவே இருந்தது. ஒரு பயிற்சியாளராக அதுவும் மும்பையை சேர்ந்தவராக எனக்கு இந்த சூழல் குறித்து நன்கு தெரியும். முதலில் இங்கு பந்துவீசியிருக்க வேண்டும், ஆனால் கேப்டனுக்கு வேறு வித்தியாசமான யோசனைகள் இருந்தன. 


முதன்மையாக அவர்தான் முடிவெடுப்பவர். என்னால் போட்டி குறித்த, அதாவது ஆடுகளம் சார்ந்த தகவல்களையும், எதிரணி மனநிலை சார்ந்த அறிவுறுத்தலையுமே அளிக்க முடியம். 106/7 என்ற ஸ்கோரில் இருந்து ஆட்டம் மாறியதை போன்ற சூழல் ஏற்படும் என நினைத்தேன். 


யார் டாஸ் வென்றாலும் பந்துவீச தான் செய்வார்கள் என்ற நினைத்திருந்தோம். நாங்கள் பந்துவீசவே முடிவு செய்தோம். தொலைக்காட்சியில் நாங்கள்தான் பேட்டிங் என சொன்னவுடன், அது பேட்டர்களின் மனதில் சில தாக்கத்தை ஏற்படுத்தும். அது போட்டிக்கு முந்தையை அந்த அரைமணி நேரத்தில் அவர்கள் மனதில் பல யோசனைகளை உண்டாக்கும்.


மேலும் படிக்க | டெவோன் கான்வேவுக்கு இடத்துக்கு போட்டிபோடும் 4 வீரர்கள்..!


ஆனால் அதேபோன்று, கேப்டனின் உள்மனதின் யோசனை சாதகமாக முடியவும் வாய்ப்புள்ளது. அரையிறுதி வரை வருவதற்கு அவரின் யோசனையும் ஒரு காரணம் எனலாம். குறிப்பாக, காலிறுதியில் அவர் நம்பர் 3 இடத்தில் இறங்கி 65 ரன்களை அடித்தார். அது அவரின் உள்மனது சொன்ன யோசனையே... ஒவ்வொரு கேப்டனின் உள்மனதும் ஒவ்வொரு வகையில் இருக்கும், அப்படியான சூழலில் ஏன் கேப்டனை குறை கூற வேண்டும். மற்ற கேப்டன்கள் 7-8 ஆண்டுகள் இருந்தும் அரையிறுதிக்கு வர இயலவில்லை. எனவே, இதை பாஸிட்டிவாகவே பார்க்கிறேன்" என்றார். 


இப்போட்டியின் டாஸ் வென்று முதலில் பேட்டிங் பிடித்த தமிழ்நாடு அணி 146 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணிக்கு, அதன் டாப் ஆர்டர் பேட்டர் சொதப்பலாக விளையாட 106 ரன்களுக்கே 7 விக்கெட்டுகள் சரிந்தது.


ஆனால், 8வது விக்கெட்டுகள் ஜோடி சேர்ந்த ஹர்திக் தமோர் - ஷர்துல் தாக்கூர் ஜோடி 105 ரன்களுக்கும், ஷர்துல் தாக்கூர் - தனுஷ் கோட்டியான் ஜோடி 79 ரன்களையும், தனுஷ் கோட்டியான் - துஷார் தேஷ்பாண்டே ஜோடி 88 ரன்களையும் சேர்த்தது. அதாவது முதல் 7 விக்கெட்டுக்கு 106 ரன்களையே சேர்த்த மும்பை, கடைசி மூன்று விக்கெட்டுக்கு 272 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 109 ரன்களையும், தனுஷ் கோட்டியான் 89 ரன்களையும் சேர்த்து அசத்தினார். தமிழ்நாடு பந்துவீச்சில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


232 ரன்கள் பின்தங்கிய தமிழ்நாடு இன்று 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 70 ரன்களை அடித்தார். ஷம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை ஷர்துல் தாக்கூர் வென்றார். ஷர்துல் தாக்கூர் இரண்டு இன்னிங்ஸை சேர்த்தும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார், பேட்டிங்கிலும் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ரோகித் சர்மாவை வீழ்த்த பிளான் போட்ட 2 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ