பெங்களூரு: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று இரவு பெங்களூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே நீக்கப்பட்டு ரிஷாபா பாந்த் சேர்க்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 203 ரன்கள் இலக்காக நிர்னயித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 63 ரன்களும், டோனி 56 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து சார்பில் மில்ஸ், ஜோர்டான், ஸ்டோக்ஸ், ப்ளன்கிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 
 
203 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான சாம் பில்லிங்ஸ் 8 ரன்களுக்கு யுஸ்வேந்திரா சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். துவக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த இங்கிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரரான ஜாசன் ராய் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.   


தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினர். 16.3 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  


இந்தியா சார்பில் யுஸ்வேந்திரா சாஹல் 4 ஓவர்களுக்கு 25 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை கைபற்றினார். இவருடன் பும்ரா 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


6 விக்கெட்டுகளை கைப்பற்றிய யுஸ்வேந்திரா சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதும் சாஹலுக்கே வழங்கப்பட்டது.


3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.