விராட் கோலியின் கனவு கபடி அணியில் டோனி, ஜடேஜா ஆகியோருக்கு முக்கிய இடம் அளிக்கப்படும் எனவும், தனக்கு இடம் வேண்டாம் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7-வது புரோ கபடி லீக் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஜெய்பூர் பிங்க பாந்தர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற போட்டியினை விராட் கோலி காணச் சென்றார்.


இந்தப் போட்டியில் பங்கேற்ற விராட் கோலி தேசிய கீதம் பாடி போட்டியைத் தொடக்கி வைத்தார். மேலும் கபடி வீரர் போல் தொடையை தட்டி ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்தினார்.


இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி பேசுகையில், “உலக அளவில் கபடி போட்டியில் இந்திய அணி சிறந்து விளங்குகிறது. புரோ கபடி தொடர் ஆரம்பித்தது முதல் கபடி போட்டியின் மீதான கவனம் அதிகமாகி உள்ளது. உலக அளவில் கபடி போட்டி அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக மாற இந்திய வீரர்களின் மனஉறுதியும், உடல்தகுதியும் தான் காரணம்" என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் கபடி போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றால் எவ்வாறு இருக்கும் என மனம் திறந்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் "கபடி விளையாடுவதற்கு அதிக அளவில் வலிமை மற்றும் விளையாட்டுத்திறன் தேவை. ஆகவே, எம்எஸ் டோனி, ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு கபடி விளையாட்டிற்கு சரியான நபர்கள். உமேஷ் யாதவ் உண்மையிலேயே வலிமையானவர். ரிஷப் பந்தும் சிறந்த வீரர்.


பும்ராவுக்கும் என்னுடைய அணியில் இடம் உண்டு. ஏனென்றால் அவர் கால் விரல்களை தரையில் பலமான ஊன்றக்கூடிய திறமைப் படைத்தவர். அதற்காக கடும் பயிற்சி எடுக்கக்கூடியவர். ஆனால் எனக்கு அணியில் இடம் இல்லை. அவர்கள் என்னைவிட வலிமையானவர்கள் மற்றும் விளையாட்டுத் திறன் கொண்டவர்கள். கடைசியாக கேஎல் ராகுல். இதுதான் என்னுடைய 7 பேர் கொண்ட கபடி அணி" என தெரிவித்தார்.