நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள் 17 வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, இறக்குமதி செலவும் குறையும். இதற்காக ஏக்கர் கணக்கில் விவசாயிகளிடம் அரசு நிலத்தை குத்தகையாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் தஙகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டத்தின் தாக்கம் அதிகமானது. ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.


கோட்டைக்காட்டில் மட்டும் மக்கள் நேற்று தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் நெடுவாசல் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்து பேசவுள்ளதாக நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.  


இந்த திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நெடுவாசல் செல்லும் வழியில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.