18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை அளித்தனர். இதையடுத்து, தகுதிநீக்க வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாகச் சத்தியநாராயணன் அறிவிக்கப்பட்டார்.  


இந்நிலையில், நீதிபதி சத்ய நாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல்கட்ட விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், நடந்த வாதத்தில் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரமும் வாதாடினர். அப்போது, 'எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும்' என பி.எஸ்.ராமனும் 'உச்ச நீதிமன்ற உத்தரவு பொருந்தாது' என அரியமா சுந்தரமும் வாதாடினர். 


கடந்த 24 ஆம் தேதியன்று தினகரன் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வாதம் நடந்து வந்தது. அனைத்து தரப்பின் வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சத்தியநாராயணன் ஒத்திவைத்துள்ளார்.