ரூபாய் 50.50 கோடியில் ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும்.


இது தொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 24-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கவர்னர், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 174 (1) ன் கீழ் சட்டசபை கூட்டத்தை ஜனவரி 6-ம் தேதி கூட்டியுள்ளார். சட்டசபையில் காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார் என குறிட்டிருந்தார்.


அந்தவகையில் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:-


> தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 15 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாடு மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. 


> மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூபாய் 563.50 கோடியில் திட்டம். மேகதாது திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.


> தமிழக மக்கள் எந்த மதம், சமயத்தை பின்பற்றினாலும் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்.


> இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.


> இன்றைய நிலவரப்படி 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் இருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும். 


> ரூபாய் 50.50 கோடியில் ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்படும். 


 



 


> கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டிஎம்சி நீரையாவது வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.


> ரூபாய் 2 ஆயிரம் கோடியில் தனியார் பங்களிப்புடன் 296 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.


> தமிழ் மொழி, தமிழ் பண்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு பெருமிதம் கொள்கிறது. 


> 2016- 2017 முதல் தமிழகத்தில் ரூபாய் 931.76 கோடியில் 4,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. 


> காவிரி ஆற்றின் தூய்மையை மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.


> தமிழகத்தில் நீர் நிலைகளைத் தூர்வாரியதன் பயனாக, இந்தாண்டு மழை நீரை சேமிக்க முடிந்தது. முதல்வர் முன்பே அறிவித்தபடி, காவிரி- தெற்கு வெள்ளாறு இணைப்புத்திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.


> இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52.01 கி.மீ தொலைவு பணிகளுக்கு ஜப்பானுடன் நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.


> தமிழகத்தில் 17,850 மெகாவாட் மின் உற்பத்தி திறனை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


> 2019- 2020 ஆம் ஆண்டில் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 12,500 கோடி கடன் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2011-2012 முதல் இது வரை 3,80,000 பசுமை வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


> 2019- ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10.5 லட்சம் பேருக்கு வேலை தரும் ரூபாய் 3,00,501 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 


> ஆதார் இணைப்பால் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடிகிறது.


> தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரூபாய் 1000 ரொக்கம் அளித்ததற்காக முதல்வரை பாராட்டுகிறேன். 


இவ்வாறு கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்தது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.