கஜா புயல் குறித்த முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளந்தாக தமிழக முதலவர் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தில் கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கஜா புயலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர். ஆனால் சில இடங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்ல என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சேலத்தில் இரும்பாலை சாலை சந்திப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரூ.21.97 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கூறினார். மேலும் புயல் பாதிப்பு பகுதிகளில் நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து பேசினார். நிவாரண பணிகளை தீவிரப்படுத்த 11 அமைச்சர்கள் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறித்தும் அவர் விளக்கினர். மேலும், சாலையில் விழுந்த 33,863 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள், IAS அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.


பாதிப்படைந்த அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறிய முதல்வர், எதிர்பார்த்ததை விடவும் மோசமான சேதத்தை டெல்டா பகுதிகள் சந்தித்துள்ளன என்றார். 


முன்னரே சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதால் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு செல்லவில்லை என்றும் நாளை மறுநாள் செல்வதாகவும் அவர் கூறினார். அரசின் முன் ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டியது குறித்து பேசிய அவர், "இயற்கை சீற்றத்தால் மிக பெரிய பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளனர். எனவே தற்போது கட்சி வேறுபாடின்றி அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் உதவ வேண்டும்" என்றார்.