கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தில் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

 

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கேள்விகள் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

அதில், பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர் குறித்து அதிர்ச்சியளிக்கும் விதமாக கேள்வி இருந்தன. குறிப்பாக "தலித் என்பவர்கள் யார்?" என்ற கேள்விக்கு, வெளிநாட்டவர், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வகுப்பினர், உயர் வகுப்பினர்” என்று பதில்கள் இருந்தன.

 

அதேபோன்று "முஸ்லிம்களின் பொதுப்பண்புகள் என்ன?" என்ற கேள்விக்கு, “பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள், சைவ உணவை மட்டும் உண்பவர்கள், நோன்பு காலத்தில் உறங்காதவர்கள், இவையனைத்தும்" என்று பதில்கள் இருந்தன.

 

இவை, NCERD எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மையத்தால் 2018-2019 கல்வியாண்டில் அச்சடிக்கப்பட்டுள்ளன. என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை பயன்படுத்தும் எந்த பள்ளியினுடையதாகவும் இவை இருக்கலாம் என்று கேந்திரிய வித்தியாலயா கல்வித்துறை கூறியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சாதிய பாகுபாடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் கேள்விகள் இருப்பதாக கண்டணம் தெரிவித்துள்ள ஸ்டாலின், இதனை உடனே நீக்கி, இதற்கு காரணமானவர்களை தண்டிக்கக் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; "சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.


இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார். மதிமுக தலைவர் வைகோ, டிடிவி தினகரன் ஆகிய பல அரசியல் கட்சித்தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.