நாடுமுழுவதும் ஊழல் புற்றுநோய் போல பரவியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் ஊழல் புற்றுநோய் போல பரவியுள்ளது எனவும், லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத அவல நிலை உள்ளதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை தடுக்க தாலுகா அலுவலகங்களிலும், அடிக்கடி திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்பு தாசில்தாரர் தர்மராஜ், ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்மராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 2016-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில், தனது பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் 2018-ஆம் அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் வாதிட்டார்.


2016-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து தற்போது கவனத்துக்கு வந்ததால் உடனடி நடவடிக்கை எடுத்ததாக ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இரு தரப்பு வாதங்களையும் கேட்டறியத நீதிபதி, பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டுகள் குறித்து துறைரீதியான விசாரணைக்கு ஏதுவாக அலுவல்களில் இருந்து நீக்கி வைப்பது தானே தவிர, தண்டனையல்ல என தெரிவித்தார்.


எனவே, இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.


மேலும், நாடு முழுவதும் புற்று நோய் போல பரவியுள்ள ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளது எனவும் வருத்தம் தெரிவித்தார். வட்டாட்சியர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.