தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


இந்நிலையில், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்.,  "தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.


சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.


தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மழைநீர் தேங்கி இருந்தால் 044-25384520, 044-25384530, 044-25384540 மற்றும் 94454-77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.