அரசு வழங்கிய இலவச மடிகணினி மாணவர்களின் படிப்புக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதைக் கண்டறிய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ/மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படுகிறது. இதேபோல பாலிடெக்னிக் மாணவ-மாணவிகளுக்கும் மடிகணினி வழங்கப்படுகின்றன. லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் சுய விவரங்கள், ஆதார் எண் உள்ளிட்டவை EMIS எனப்படும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.


இந்த மடிகணினிகளை மாணவர்களை தவிர வேறு யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 8 ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால் மாணவர்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்துள்ளன என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கேட்டுள்ளது. இதையடுத்து மடிகணினி வாங்கிய மாணவர்களிடம் 15 வகையான தகவல்களை பெற அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மடிகணினி வாங்கிய ஆண்டு, மாணவர் தற்போது தொடர்ந்து படிக்கிறாரா, சுயதொழில் செய்கிறாரா, வேலை செய்கிறாரா உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளியில் எப்போது லேப்டாப் வழங்கப்பட்டது, மடிகணினியை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா, படிப்புக்கு தேவையான சாப்ட்வேர் வழங்கப்பட்டதா, மடிகணினியில் உள்ள தகவல்கள் படிப்புக்கு பயன்பட்டதா என்பதையும் உரிய படிவத்தில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழங்கிய ஓராண்டுக்குள் மடிகணினியில் பழுது ஏற்பட்டதா? மாணவர்கள் தற்போது மடிகணினியை வைத்துள்ளனரா? மடிக்கணினியின் தற்போதைய பயன்பாடு என்ன, மேற்படிப்புக்காக பயன்படுத்துகின்றனரா? வேறு யாருக்கும் கொடுத்து விட்டனரா அல்லது பழுதாகியுள்ளதா என்ற விவரங்களையும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.