இரண்டு வாரங்களில் தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதை தொடர்ந்து, கஜா புயல் நிவாரண நிதி குறித்து தமிழக அரசை மத்திய அரசும், மத்திய அரசை தமிழக அரசும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். கஜா புயல் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளைக் கொண்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரித்து வரும் நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.


முந்தைய விசாரணைகளின் போது கஜா புயல் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாக 2 முறை மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் விளக்கங்கள் போதுமானவையாக இருந்ததாகவும், மத்திய குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட துணைக்குழுவிடம் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.


இது பின்னர் உயர்மட்டக் குழுவுக்கு அனுப்பப்பட்டு இன்னும் 2 வாரங்களில் தமிழகத்திற்கான கஜா புயல் நிவாரண நிதி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். அதற்கு முன் தேவைப்பட்டால் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் உள்ள ஆயிரத்து 277 கோடியே 62 லட்சம் ரூபாயை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு விரைவில் நிவாரணத்தொகையை அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்து விசாரணையை ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.