TN Agriculture Budget 2024: லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி... விரைவில் நிவாரணம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!
![TN Agriculture Budget 2024: லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி... விரைவில் நிவாரணம் - பட்ஜெட்டில் அறிவிப்பு! TN Agriculture Budget 2024: லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி... விரைவில் நிவாரணம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2024/02/20/368905-feb20005.png?itok=ytD5IgiI)
TN Agriculture Budget 2024 Announcement: இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
TN Agriculture Budget 2024 Announced Compensation For Crop Damages: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப். 12ஆம் தேதி தொடங்கியது. 2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி, சில சர்ச்சைகளுடன் சட்டப்பேரவை தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே வெளியேறினார்.
ஆளுநர் உரை மீதான விவாதங்கள், மானிய கோரிக்கை மீதான விவாதங்களை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறைக்களுக்குமான நிதிநிலை அறிக்கை நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
குறளுடன் உரையை தொடங்கிய அமைச்சர்
தொடர்ந்து, இன்று தனி வேளாண் பட்ஜெட், வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடங்கியதில் இருந்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது நான்காவது தனி வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசிக்கும்போது, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பச்சை தூண்டை அணிந்திருந்தார். உரையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் இன்று அறிவித்தார். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட்டை உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கினார்.
1.50 லட்சம் பேருக்கு மின் இணைப்பு
2020-2021ஆம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
2022-23ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வேளாண் பட்ஜெட் உரையில்,"கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு நல்ல செய்தி
கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது" என குறிப்பிட்டார்.
அந்த வகையில், இயற்கை பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தியைும் அவர் பட்ஜெட்டில் அறிவித்தார். அதாவது, தென் மாவட்டங்களில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 இலட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என வேளாண்துறை பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ