'சிதம்பரத்தை தண்டனை கைதியாக்கி, சிறைக்கு அனுப்பினால் மட்டுமே, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்' என பாஜக தேசய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், இன்றைய பொருளாதார நிலை குறித்து பேச, சிதம்பரத்திற்கு எந்த யோக்கியதையும் கிடையாது எனவும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., 


"கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, சுமார் 15 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் கைதானார். சிறையில் கட்டில், தலையணை, வெஸ்டர்ன் டாய்லெட், டி.வி., வீட்டிலிருந்து சாப்பாடு என எல்லா வசதிகளையும் கேட்டுப் பெற்றார்.


சிறைவாசம் அவரது உடல் நலனை மிகவும் பாதித்துவிட்டது என்றும் அதனால் எட்டு கிலோ எடை குறைந்துவிட்டது என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் அழாத குறையாக கெஞ்சி, கூத்தாடி ஜாமீன் பெற்றனர்.


கிடைத்தது ஜாமீன் தான். ஏதோ வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தது போலவும் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று விடுதலையாகி வந்தது போலவும் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க ஒரு கூட்டம்!


ஜாமீனில் வெளிவந்த பிறகு இந்த வழக்கு சம்பந்தமாக பொது நிகழ்ச்சிகளில் பேசவோ, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.


சிதம்பரம் பெரிய அறிவு ஜீவியாயிற்றே.. வழக்கு பற்றித்தானே பேசக் கூடாது என்றவர், பத்திரிகையாளர்களை அழைத்து பிரதமர் மோடி மீது புழுதி வாரி இறைத்துள்ளார். நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று கண்ணீர் வடிக்கிறார்.


ஊழல் வழக்கில் கைதாகி, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது இன்றைய பொருளாதார நிலை பற்றி பேச ப.சிதம்பரத்திற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.


எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் நான் அமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளேன் என்று சந்தடி சாக்கில் குறிப்பிடுகிறார். ‘நான் நிரபராதி’ என்று சொன்னாலே நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.


சுதந்திரம் பெற்றது முதல் 50 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி செய்த அலங்கோலத்தை சீர்செய்யவே பல ஆண்டுகள் ஆகும்.


ப.சிதம்பரத்தை தண்டனைக் கைதியாக்கி சிறைக்கு அனுப்பினால் மட்டுமே ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்." என குறிப்பிட்டுள்ளார்.