கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், பரவலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம், அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 21 சென்டி மீட்டருக்கும் மேல் அதி கன மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


இதேபோல், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டை வெளியிட்டுள்ள வானிலை மையம், அந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 12 முதல் 20 சென்டி மீட்டர் வரை மிக கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், திருவள்ளூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு(சில மணி நேரங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை) வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதே போன்று, புதுச்சேரி மாவட்டம் முழுவதும் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.