வடதமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்றைய வானிலை நிலவரம் குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "தென்மேற்கு பருவமழை நேற்று கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது இன்றும் தொடர்கிறது.


தமிழகத்தில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும். 


காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்  இடைவெளி விட்டு ஒரு சில முறை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 9 செ.மீ, ஆரணி மற்றும் திருப்பத்தூரில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.