முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த புதன் அன்று துவங்கிய இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.



மாநாட்டில் கலந்துக்கொண்ட ராணுவ அமைச்சர் தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5000 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.


இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3,42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.



இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது...


முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது?, 2015-ஆம் ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன?, இந்த மாநாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? இந்த இரு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை? என கேள்வியெழுப்பினர். 


மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்ததுடன், முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.