சென்னை மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த தமிழக முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் MGR அவர்களுக்கு ஏற்கனவே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடலும், MGR சமாதி வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.


மேலும் அவரக்கு நினைவிடம் அமைப்பது குறித்து தகவல்கள் வெளியான நிலையில்.. “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெ., அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்ககூடாது” என எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வளர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


இதற்கிடையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த காந்திமதி என்பவர் "மெரினா கடற்கரையில் நினைவிடங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது எனவும் சென்னை மெரினா கடற்கரையில், நினைவிடங்கள் அமைக்க மாநகராட்சி ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.


இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்குவதற்கு முன் மனுதாரர் காந்திமதி தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். 


திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!