40 மணி நேரம் கழித்து பொன்பரப்பி வன்முறை குறித்து கமல் ட்வீட் `பெரும் அவமானம்`
`பொன்பரப்பி` சம்பவம் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என டுவிட்டரில் பதிவிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 அன்று நடந்த தேர்தலின் போது சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வசித்து வந்த தலித் மக்கள் மீது சுமார் 120-க்கு மேற்ப்பட்ட ஆதிக்சாதிக் கும்பல் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள். 100-க்கு மேற்ப்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அதில் 20 வீடுகள் முழுவதும் நொறுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயம் அடைந்த 15-க்கு மேற்ப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு காரணமாக இதுவரை 25-க்கு மேற்ப்பட்டோர் கைது செய்து வழக்கு போடப்பட்டு உள்ளது. பலர் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளத்தில் கண்டனங்கள் பதிவிட்டு வருகின்றனர். சில அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை பதிவுசெய்ததொடு, சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது புதிதாக அரசியலில் களம் கண்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பொன்பரப்பி வன்முறை சம்பவம் நடந்து சுமார் 40 மணி நேரம் கழித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, "பொன்பரப்பி" சம்பவம் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் எனக் பதிவிட்டுள்ளார்.