ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: ஈரான் நாட்டில், கொரானா பீதியால் தவித்து வரும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் பல்வேறு இடங்களில், இந்திய மீனவர்கள் சுமார் 450 பேர் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், இவர்களில், 300 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 


ஈரானில் தற்போது, கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவர்கள் அங்கிருந்து வெளியேற முயன்றும், பல்வேறு நாடுகளுக்கும், விமான சேவை ரத்தாகி விட்டதால், தாயகம் திரும்ப இயலாது தவித்து வருவதாகவும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கிஷ் துறைமுகம் (Port Kish), சேரூ (Cheeru) உள்ளிட்ட ஈரானின் பல்வேறு இடங்களில் உள்ள தமிழக மீனவர்கள் 300 பேரையும், பத்திரமாக மீட்டுத்தருமாறு, முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 


இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது... "ஈரான் நாட்டின் பல்வேறு துறைமுகங்களில், பல்வேறு மீன்பிடி படகுகளில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் உள்பட இந்தியாவை சேர்ந்த 450 மீனவர்கள் நலன் தொடர்பாக உங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஈரானில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த மீனவர்கள் கிஷ், சீரூ மற்றும் ஈரானின் இதர துறைமுகங்களில் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அந்த மீனவர்களை ஈரானில் இருந்து உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு அந்த மீனவர்கள் பாதுகாப்பாகவும், உடனடியாகவும் திரும்ப ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தேவையான ஆதரவையும், உதவியையும் செய்ய வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.