சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், அதேபோல மின்சாரம் தாக்கி மேலும் ஒருவர் சாவு இறந்துள்ளதால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தமிழகரசுக்கு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமும் விலகும் முன்பே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறியது கண்டிக்கத்தக்கதாகும்.


திருவாரூர் மாவட்டம் மணலகரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்ற விவசாயி, அவரது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றச் சென்ற போது மழை நீரில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும்.


பருவமழை தொடங்குவதற்கு முன்பே மின் கம்பிகளின் உறுதித் தன்மையை மின்வாரியம் சோதனை செய்திருக்க வேண்டும். ஒருவேளை பலத்த காற்றின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், அடுத்த நிமிடமே மின்தடை ஏற்படும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும். 


ஆனால், அதை செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தவறிவிட்டது. கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று மின்சாரக் கசிவு சார்ந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசும், மின்வாரியமும் படுதோல்வியடைந்து விட்டன, இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இனியாவது இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


திருவாரூர் மாவட்டத்தின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி கலியபெருமாளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வித்தகுதிக்கேற்ற வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்