இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக, இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, தமிழக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியமர்த்த கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார்.


இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பார்த்திபன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது அரசிற்கும் மனுதாரருக்கும் இடையேயான விவகாரம் எனவும், இதில் சிறப்பு அதிகாரி தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, உயர்நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவை காரணம் காட்டி இந்து சமய அறிநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் தர மறுப்பதாகவும், இதனால் துறை ரீதியான விசாரணை நடத்த முடியவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, அரசு தன் வசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும்படி அரசு தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், கவிதாவின் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு நான்கு வாரங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.