அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்ற பெண் தூத்துக்குடி எஸ்.பியிடம் பாலியல் புகார் அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை அடித்ததாக சசிகலா புஷ்பா சர்ச்சையில் சிக்கினார். இதனால் எம்.பி சசிகலா புஷ்பா அ.தி.மு.க கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.


கடந்த திங்களன்று ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், தனது பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனக்கும் தனது குடும்பத்தாரின் உயிருக்கும் பாதுகாப்பு தேவை என அவர் வலியுறுத்தினார். இதனால் சசிகலா புஷ்பாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது அவர்களது சென்னை மற்றும் தூத்துக்குடி வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.தூத்துக்குடி எஸ்.பியிடம் பானுமதி தனது சகோதரி ஜான்சிராணியுடன் சென்று அளித்த புகார் மனுவில் கூறியதாவது:- சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்த போது தனக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாகவும், சசிகலா புஷ்பாவும் மதுபோதையில் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும்' குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இது தவிர சசிகலா புஷ்பா மீது நெல்லையிலும் பணமோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.