புதுச்சேரி அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் எதையும் 10 நாட்களுக்கு அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும், இதனால் மாநில அரசின் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்எல்ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஏப். 30ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 


இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆளுநர் கிரண்பேடி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூன் 7ஆம் தேதி புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் நடைபெறயிருப்பதால் இடைக்கால உத்தரவு தேவை என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 


ஆனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்க விரும்பவில்லை என கூறிய உச்ச நீதிமன்றம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை எதிர்மனுதாரராக சேர்த்து வழக்கை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை 10 நாட்களுக்கு அமல்படுத்த வேண்டாம் என புதுச்சேரி அமைச்சரவைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.