நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவன் இர்ஃபான் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவன் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தேனி காவல்துறையினர் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 


இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. உதித் சூர்யா ஏற்கனவே அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி மீதும் ஆள்மாறாட்ட புகார் எழுந்த நிலையில், விசாரணையில் அது தவறு என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் எஸ்ஆர்எம், பாலாஜி, சத்யசாய் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடம் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து நேற்று விசாரணை நடத்தப்பட்டது.


இதனிடையே, நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகாரில் தேடப்பட்டு வந்த, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான், சேலம் அருகே தீவட்டிப்பட்டியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே அவரது தந்தை சபி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்த நிலையில், இருவரையும் விசாரணைக்காக தேனி கொண்டு சென்றுள்ளனர்.