சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி இளம்பெண் என்ஜினீயர் சுவாதி, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவாதியை கொலை செய்த கொலைகாரன் அவரது செல்போனையும் எடுத்துச் சென்றுவிட்டார். காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ஆன் செய்தே வைத்திருந்திருக்கிறார். பின்னர் அதை "சுவிட்ச் ஆப்" செய்திருக்கிறார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதியின் வீடும் சூளைமேட்டில்தான் உள்ளது. செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்ட இடமும் அவரது வீட்டு அருகில் உள்ள இடத்தையே காட்டுகிறது.


எனவே சுவாதியை கொலை செய்து விட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுவாதியை கொலை செய்தவர் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சூளை மேட்டில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். கொலையாளி என்று சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தையும் பொதுமக்களிடம் காட்டி விசாரணை நடத்துகின்றனர்.