டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து கஜா புயல் பாதிப்பு குறித்து பேசுகிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 16 ஆம் தேதி கஜா புயல் தாக்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் மீள முடியாமல் தவிக்கின்றன. ஏராளமான பொருட்சேதத்துடன் உயிர் தேசமும் ஏற்பட்டுள்ளது. புயலுக்குப் பிந்தைய நாளே சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கின. அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் நேற்றுமுன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிலையில் சேத மதிப்பீட்டு அறிக்கையுடன், நேற்று மாலை முதலமைச்சர் டெல்லி சென்றார். அங்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவரை வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் அவர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


பிரதமர் மோடியை இன்று காலை சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்குத் தேவையான கஜா புயல் நிவாரண நிதியைக் கோரவுள்ளார். அதன் பின் மத்தியக் குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடனடி நிதியாக மத்திய அரசிடம் இருந்து 13 ஆயிரம் கோடி ரூபாய் கேட்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடதக்கது!