கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில எல்லையோர சாலை பொக்குவரத்துக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகளில் குறிப்பிட்ட வாகனங்களை தவிர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.


அந்த வகையில்., அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்கள். மற்றும் இதர சரக்கு வாகனங்கள்.



தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்.


பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துக்கள் மட்டுமே இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்த கட்டுப்பாடு ஆனது வரும் மார்ச் 31 வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.


எனினும் இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும், வாகனங்களும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் எனவும், நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனிடையே வரும் ஞாயிறு அன்று பிரதமரின் ஒரு நாள் அடைப்பு முயற்சியின் கீழ் தமிழகம் முழுவதும், அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படாது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.


மேலும் அனைத்து அரசு, தனியார் நூலகங்கள் நாளைமுதல் 31-ஆம் தேதி வரை மூடப்படும் எனவும் இந்த அறிவிப்பில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.