மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3,676 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக 2017-18 ஆண்டுக்கான நிதியாக 5920 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பான செலவின விவரங்களை மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3,676 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.


இது குறித்து மத்திய தலைமை கணக்காயர் எனப்படும் சிஏஜி அறிக்கையில்,  நிதியாண்டில் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு சார்பில் 5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தொகையில் 3 ஆயிரத்து 676 கோடி ரூபாயை பயன்படுத்தப்படாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு 3 ஆயிரத்து 82 கோடியே 39 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில், 728 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செலவிடப்படாத 2 ஆயிரத்து 354 கோடியே 38 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.  இதேபோல் ஊரக வளர்ச்சி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 97 கோடியே 65 லட்சம் ரூபாயும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 247 கோடியே 84 லட்சம் ரூபாயும், பெண்கள் முன்னேற்ற திட்டத்தில் 23 கோடியே 84 லட்சம் ரூபாயையும் தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டப்பட்டு உள்ளது. 


நிதியை சரியாக பயன்படுத்த திட்டமிடப்படாமல் கால விரயம் செய்ததே திரும்ப அனுப்பியதற்கான காரணமாக  சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.