திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 


விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 27.1.2020 முதல் 31.3.2020 வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9592.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் தமிழக முதல்வர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.