தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியா குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வங்கக்கடல், குமரி கடல் பகுதியில் மீனவர்கள் நாளை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.


தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நகர்ப்புறங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில்., தென்மேற்கு வங்க கடல் - தென்தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


சென்னையை பொறுத்தவரையில்., கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.