காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காவல்துறை சார்பில் இலவசமாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 


சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காவல்துறை சார்பில் இலவசமாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


கூடுவாஞ்சேரி காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் லாரி மூலம் மசூதி தெரு, காமராஜர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க இலவசமாக தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.


விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை பொதுமக்கள் வரிசையில் நின்று குடம் குடமாக தண்ணீரை நிரப்பிச் சென்றனர். கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் தொடர் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் காவல்துறையினர் தாமாக முன்வந்து தண்ணீர் வழங்கியதை அப்பகுதி பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.