தமிழக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மணல் இணைய சேவை இணையதளத்தையும், செல்லிடப்பேசி செயலியையும் தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- 


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (28.6.2017) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாக “தமிழ்நாடு மணல் இணையசேவை (www.tnsand) இணைய தளத்தையும், செல்லிடப்பேசி செயலியையும் துவக்கி வைத்தார்கள். உபயோகிப்பாளர்களுக்கு மணல்தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைத்திட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், பொதுப் பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அவற்றில் ஒன்றாக, தற்போது இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் வாயிலாக, பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும்,  மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக் கொள்ளலாம்.


மணல் பெற்றுக் கொள்வதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுப்பணித்துறையின் வாயிலாக 28.6.2017 முதல் 30.6.2017 வரை பயிற்சியளிக்கப்படும்.மேலும், 1.7.2017 முதல் பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணைய சேவை மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும்.