மாணவர்களின் மன அழுத்தத்தினை போக்குவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நரேந்தர். இவர் நேற்று பள்ளிக்கு தாமதமாக வந்ததால் அந்த மாணவனுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்து நடை தண்டனை கொடுத்துள்ளார்.


அப்போது நடக்க முடியாமல் மயங்கி விழுந்து மாணவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் நேற்று மாலை புகார் கொடுத்துள்ளனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பள்ளி சி.சி.டிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்துள்ளனர்.


அதில் மாணவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், உடற்கல்வி ஆசிரியரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து, மாணவரின் பெற்றோர் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்பொழுது, மாணவர்களின் மன அழுத்தத்தினை போக்குவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.


மாணவர்களின் மனதையும் உடலையும் புரிந்து கொண்டு ஆசிரியர்கள் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு தேவைப்பட்டால், அவர்கள் விருப்பப்பட்டால் யோகா பயிற்சி தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


மேலும் அவர், நரேந்திரன் உயிர் இழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் உயிரிழந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்றும் கூறியுள்ளார்.