உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்திலும் வலியுறுத்தினோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை தடுக்க திமுக முயற்சிப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது என கூறினார். புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த திமுக கோரியதற்கு முறையான பதில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநில தேர்தல் ஆணையத்தின் செய்லபாடுகள் முறையாக இல்லை என குற்றம் சாட்டினார்.


சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டப் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப பொய் பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார்.


உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பல வழிகளில் அதிமுக அரசு முயற்சித்து வருகிறது என்றும், மறைமுகமாக வேறு ஆட்களை வைத்து அதிமுக வழக்கு தொடர்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுகவை பொறுத்தவரையில், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை என்றும், தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் நீதிமன்றம் சென்றோமே தவிர, தேர்தலை நிறுத்த அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.