மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு நாள் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று துவங்கி நடைப்பெற்று வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் இந்த போராட்டத்தால் வங்கி, போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல், பள்ளி - கல்லூரி என கல்வி நிலையங்கள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு அதிகாரிகள் இந்த இரண்டு நாட்களில் காரணம் இன்றி விடுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்


இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளி வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் அது மாணவர்களின் படிப்பை பாதிக்கப்படக்கூடும் என்பதால் மாணவர்களை தங்கள் குழந்தைகளாக பாவித்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.


சென்னை முகப்பேர் அரசு பள்ளியில் கலை அரங்கம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை, தானியங்கி வருகைப்பதிவு, குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்டவற்றை குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.