இரும்பன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். படம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்த அவர், தமிழக அரசியல் களத்தில் சினிமாவின் முக்கியத்துவம், அதன் மூலம் ஏற்பட்ட அரசியல் மாற்றம் உள்ளிட்டவைகளை எடுத்துரைத்தார். அதேநேரத்தில், சினிமா துறை கார்ப்ரேட்மயமாதலுக்கு இரையாகிக் கொண்டிருப்பதாக எச்சரித்த அவர், தமிழகத்தில் ஒரு நபரின் கட்டுப்பாடில் திரையரங்குகள் வந்துவிட்டால் விநியோகிஸ்தர்கள் மற்றும் தொழிலாளர்களின் நிலை என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசியலில் சினிமா


அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "திரைப்பட துறை மூலம் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உலகத்திலும் எங்கும் இப்படி இல்லை. திரைப்பட துறையில் முதல்வரை தேடுவதும் இங்கு உண்டு. தமிழக ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சினிமாவுக்கு பங்கு உண்டு. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதல்வர்களாகவும், விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகவும் சினிமாவில் இருந்து தான் வந்துள்ளார். தமிழக அரசியலில் 50 ஆண்டுகள் திரைப்பட துறை பங்கு உண்டு. சினிமாவுக்கு திராவிட அரசியலை மக்களின் கொண்டு சேர்த்ததில் பங்கு உண்டு. சினிமாவில் இருந்தவர்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அமரும் வாய்ப்பு கிடைத்து. 


மேலும் படிக்க | ஆளுநரின் கோபம் இல்லை; பாரம்பரிய கோபம் - முரசொலி பதிலடி


திரையில் எம்ஜிஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்கவில்லை. அரசியல் பேசினார். பெரியாரின், அண்ணாவின் கொள்கைகளை பேசினார். சமூக நீதி அரசியல், தொழிலாளிகள் அரசியலை பேசினார். சினிமாவை வருமானத்துக்கு மட்டும் பயன்படுத்தவில்லை. கொள்கைகளுக்காவும் பயன்படுத்தினார்கள்‌. சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாத காலத்தில் விழிப்புணர்வுடன் படங்களை வெளியிட்டது தமிழ்நாடு தான். தமிழகம் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருக்கிறது. 


சினிமா மிகப்பெரிய ஆயுதம்‌


சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகவும் சினிமாவை மாற்றலாம். சினிமா மிகப்பெரிய ஆயுதம்‌. மக்களை சென்றடையும் ஆயுதம். சினிமாவை கலையாக மட்டும் ரசிக்க வேண்டும் என்பார்கள். அப்படி இல்லாமல் சினிமா சமூக மாற்றத்துக்கான கருவியாக இருக்க வேண்டும். திரை உலகம் கார்ப்பரேட் மயம் ஆகி வருகிறது. இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது. கார்ப்பரேட் மயம் ஆவதை தடுக்க போராட வேண்டியுள்ளது.


ஒரு நபர் கட்டுப்பாட்டில் திரையரங்குகள்


முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள். குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி கொண்டு இருக்கிறது. தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொழில் போட்டி மட்டுமல்ல. தொழிலாளிகளின் உரிமைகளையும் பறிப்பதாகும்.  


யாருக்கும் எதிராக பேசவில்லை. எனக்கு சமூக பொறுப்பும் உள்ளது. எம்ஜிஆர் வசனம் எழுத மாட்டார், பாடல் எழுத மாட்டார், இசை அமைக்க மாட்டார்‌. ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவார். அதேபோல தேர்ந்து நடிக்க வேண்டும். மக்களோடு இயங்க வேண்டும். ஜுனியர் எம்ஜிஆர் அப்படி பழக வேண்டும். சமூக நீதி பேசுவோர் கையில், தமிழ் திரைத்துறை இருக்க வேண்டும்; இயக்க வேண்டும்'' என்று கூறினார்.


அண்மைக்காலமாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், தியேட்டர்களை கட்டுப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் இத்தகைய கருத்துகளை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.


மேலும் படிக்க | 'பானிபூரி விற்ற வட நாட்டு கும்பல் தமிழ்நாடு பெயரை மாற்ற துடிக்கிறது' - ஆர்.எஸ். பாரதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ