திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த காவலர் தனது தபால் வாக்கை விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் காவலர் அந்தோணி சேகர். இவர் உவரி காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். திசையன்விளை பஜார் பகுதியில் 4-வது தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 
அப்பொழுது திசையன்விளையை சேர்ந்த முன்னாள் திமுக  நகர செயலாளர் ஜெயராஜ் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரையும், காரையும் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தபால் ஓட்டுக்கான தபால் இருந்தது. 


இதுதொடர்பாக விசாரித்தபோது, உவரி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் அந்தோணிசேகர் ரூ.7500 பெற்று கொண்டு ஜெயராஜிடம் தபாலை கொடுத்து அனுப்பியது தெரியவந்துள்ளது.


இதையடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் திசையன்விளை காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் காவலர் அந்தோணிசேகர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் பிரதிநிதி சட்டத்தின் கீழ் காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக நகர செயலாளர் ஜெயராஜ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஜெயக்குமார் வசமிடம் இருந்து எத்தனை தபால் தலைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விபரத்தினை காவல்துறையினர் வெளியிடவில்லை.


வரும் 18-ஆம் நாள் தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவலர்களின் தபால் தலைகள் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விற்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.