அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 7 ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்ர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில், வானிலை ஆய்வு மையம் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் கனமழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார். நிவாரண முகாம்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதி உட்பட அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வந்தால், அதை எப்படி சமாளிப்பது என்பதை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.



கனமழை குறித்த முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கவர்னரை சந்திக்க உள்ளார்.